Friday, January 3, 2020

Thirumoolar Pranayama - Song 7 (Tamil, English)

பாடல் எண் : 7    

எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே அதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை
அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனு மாமே  .

பொழிப்புரை:
எந்த ஆசனத்தில் இருந்து பிராணாயாமம் செய்யினும், பூரகத்தைச் செய்தல் இடைநாடி வழியாகவே யாம். அவ்வாறு செய்தலால், உடலுக்கு ஊறு ஒன்றும் உண்டாகாது. அந்த ஆசனத்திலே பூரகம், கும்பகம், இரேசகம் என்பவற்றை மேற்கூறிய வாறு செய்யச் சங்கநாதம் முதலிய ஓசைகளை உள்ளே கேட்கும் நிலைமை உண்டாகும். அஃது உண்டாகப் பெற்றவன் பின்னர் யோகருள் தலைவனாய் விளங்குவான்.

குறிப்புரை:
"எங்கு" என்னும் இடப்பெயர் இங்கு யோகா சனத்தைக் குறித்தது. பூரி, முதனிலைத் தொழிற்பெயர். இங்கும், 'பூரித்தல் இடமூக்கு வழியாக' எனவே, 'இரேசித்தல் வலமூக்கு வழியாக' என்பதும் கூறியதாயிற்று. இவ்வாறு வலியுறுத்து ஓதியதனால், "மூக்குத் துளை இரண்டாகப் படைக்கப்பட்டது பூரக இரேசகங்களை இவ்வாறு செய்தற் பொருட்டே" என்பது விளங்கும். விளங்கவே, வாய்வழியாக அவற்றைச் செய்தல் கூடாமையும் பெறப் படும். 'அது' என்றது பிராண வாயுவை. பிடித்தல், பூரித்தல், விடுதல், இரேசித்தல், அளவும் - மேற்குறித்த உயரளவுகாறும். செல்ல - பிரணாயாமத்தில் பயில. சங்க நாதம் முதலிய தச நாதங்கள் (பத்து ஒலிகள்) இவை என்பது பின்னர்க் கூறப்படும்.
இதனால், 'ஆசன வேறுபாட்டால் பிரணாயாம முறை வேறுபடுதல் இல்லை' என ஐயம் அறுக்கப்பட்டது.

Transliteration:
engkae irukkinum poori idaththilae
angkae athuseyya aakkaik kazhivillai
angkae pidiththathu vidda'la vunjsellach
sangkae ku'rikkath thalaivanu maamae

Translation:
Wherever you be,
there control breath
The body then will perish not.
As you inhale,
control and exhale in measure prescribed
Well may you become a triumphant lord
With the conch of victory,
Your achievement heralding.

No comments:

Post a Comment